Monday, October 09, 2006

நிராகரிப்பு

என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.


2)
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.


3)
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.


சந்திரவதனா
5.9.1999

Wednesday, June 07, 2006

காதல் கசக்குமா...?

"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...

என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.

ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது
என்றும் கூறப் படுகிறது.

தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.

வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.

இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.

காதல்

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்புத்தான் காதல்.

அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதும், மனைவி கணவனிடத்தே கொண்டிருப்பதும் காதல்தான்.

ஆனால் அடியாள் ஆண்டாளிடம் கொண்டிருப்பதை பற்று என்றும், அன்னை மகவிடம் கொண்டிருப்பதைப் பரிவு என்றும், நண்பன் நண்பனிடத்தே கொண்டிருப்பதை நட்பு என்றும், கணவன் மனைவியிடத்தோ, மனைவி கணவனிடத்தோ கொண்டிருப்பதை அன்பு என்றும் நாம் வகுத்துக் கொண்டுள்ளோம்.

இந்த அன்பு, நேசம், பிரியம், பற்று, பரிவு, நட்பு எல்லாமே காதலென்ற சொல்லினுள்ளேயே அடங்குகின்றன. இருந்தும் தற்போது காதல் என்பது ஆண் பெண் இடையேயுள்ள அன்பை மட்டும் குறிப்பதாகி விட்டது.

இந்தக் காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........
(காதற்பாட்டு, அந்திப்பொழுது -
பாரதியார் பாடல்கள்
)

ஆழமான அன்பு நிறைந்த காதல் ஒருவனுக்கு இன்பத்தையும், இனிமையையும் மட்டுமல்லாது வீரத்தையும், துணிவையும் அறிவாற்றலையும் வாழ்வில் பற்றுதலையும் கொடுக்கிறது. இதை இன்றைய ஆராய்சியாளர்களும் மருத்துவர்களும் மட்டுமல்லாது அன்றைய கவிஞர்களும் அனுபவித்து உணர்ந்து சொல்லியுள்ளார்கள்.

காதல் இல்லாத வாழ்வே இல்லையெனக் கூறலாம். அப்படியொரு வாழ்வு இருந்தால் அது அர்த்தம் இல்லாததாகவும், சோகம் நிறைந்ததாகவும், தனிமைப் பட்ட உணர்வைத் தருவதாகவும், தாழ்வுச் சிக்கலைத் தோற்றுவிப்பதாகவுமே இருக்கும்.

மனிதர் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றி விட்டது. இதை யாரும் இல்லையென்று சொல்லி விட முடியாது. பண்டைய காலத்திலேயே காதல் ஆதரிக்கப் பட்டுள்ளது. களவியல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இருந்தும் இடைப்பட்ட காலத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு என்றதொரு தப்பான கருத்து எம்மவரிடையே நிலவியது. இதற்கான முக்கிய காரணம் எம்மவரிடையே தலை விரித்தாடிய சாதி, மதம், அந்தஸ்து போன்ற அர்த்தமற்ற காரணங்களே.

இன்றைய போரும் அதனால் ஏற்பட்ட புலம் பெயர் வாழ்வும் எம்மவரிடையே ஆழப்பதிந்து விட்ட இப்படியான சம்பிரதாயங்களை முழுமையாக வழக்கொழிய வைக்கா விட்டாலும் ஓரளவுக்குத் திருத்தியுள்ளன.

தற்போது காதலனும் காதலியும் மற்றவர் அறியாமல் ஒருவரை யொருவர் தனியாகச் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் களவியலை பெற்றோர்கள் கண்டும் காணாதவர்கள் போல இருந்து அநுமதிக்கிறார்கள்.

மனம் ஒத்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமானது. அவசியமானது.

மிகமிக நெருக்கமான அன்பின் ஆழ்ந்த வெளிப்பாடே உடல் இணைவு என்றாலும், காதலர்கள் தமக்கென ஒரு வேலி போட்டு அன்பால் மட்டும் தழுவிக் கொள்வது அழகானது.

உடல்களை விடுத்து
உள்ளங்கள் பரிசிக்கும் காதல்
உன்னதமானது.


சந்திரவதனா
யேர்மனி
14.2.2000

Sunday, February 26, 2006

காதலர்தினம்

ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி...
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்...
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.

வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும்.
இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின்
கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

- உன்னுடைய வலண்டைனிடமிருந்து! -

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

***********************************
ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

சந்திரவதனா
யேர்மனி
1999